தோற்றம் : 13 நவம்பர் 1965 — மறைவு : 15 ஓகஸ்ட் 2012
உடப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallan ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரையா வசந்தகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் அரவணைக்க யாருமின்றி அனாதைகளாய் தவிக்கின்றோம். எங்கள் வாழ்வில் என்றும் நினைத்து பார்க்க முடியாத கொடிய நாள் ஏன் வந்தது ஆவணி பதினைந்தாம் திகதி.
நாம் கடந்து வந்த பாதையை பார்க்கின்றேன்! நல்லதே நினைப்போம் நமக்கு நல்லதே நடக்கும் என்பீர்கள் ஆனால் நல்லவனுக்கோ குறைந்த ஆயுள் தான். என்று சொல்லவில்லையே!
நாங்கள் மட்டுமா தனிமையில் தவிப்பது, நீங்கள் இல்லாத கூட்டிற்குள் நிம்மதி ஏது நித்திரை ஏது? நித்தமும் நியமே என்று நிழல் தரும் மரமாக நேற்று இன்று மட்டுமா இன்னும் எத்தனை காலம் கடக்க போகின்றோம்.
விதி நம்மை சதிவலை விரித்தது விதம் விதமான சொற்களால் எங்களை சாகடிக்கின்றார்கள்! எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு - அதை எப்படி வெளிபடுத்துவது என்பதில் தான் வித்தியாசங்கள் உண்டு! உரிமை உள்ளவர்களிடம் கண்ணீராகவும் உரிமை அற்றவர்களிடம் புன்னகையாகவும்,
தோல்வி அடையும்போது தோற்றவர்களை நாம் காயப்படுத்தக்கூடாது என்பீர்கள் தோளாக நின்று உதவி செய்ய வேண்டும் என்பீர்கள்! இப்பொழுது நான் தோல்வியில் நிற்கின்றேன் வெற்றியை திறப்பதற்கு சாவியும் இல்லாமல்,
தோற்றவன் வெற்றி அடையும் போது அவன் வாழ்ந்த வார்த்தை இல்லாமல் போய்விடும்.
உரிமை கொள்ள உறவுகள் ஆயிரம் இருந்தாலும், உள்ளதை புரிந்து கொள்ள உங்களை போல் யாருமில்லை. உண்மையான அன்பு பாசம் உள்ளவர்கள் இன்னும் உரிமையோடு வாழ்கின்றார்கள் அவர்கள் உன்னதமானவர்கள். உங்கள் ஆசைபோல் நம் பிள்ளைகளை உயரவைப்பது தான் என் கடமை என்று உறுதி செய்கிறேன்.
எங்கள் அன்பு அப்பாவுக்கு ஒரு அன்பு மடல்.
ஏழ்மையிலும், நேர்மையிலும், கோபத்திலும், பொறுமையிலும், தோல்வியிலும், விடாமுயற்சியிலும், துன்பத்திலும், துணிவிலும், வறுமையிலும், உதவி செய்யும் மனம் கொண்டவராகவும், சொல்வதிலும் எளிமை, பதவியிலும் பணிவு இவை அனைத்திற்கும் ஒருவராய் இருந்தீர்கள்
அப்பா சிரித்து சிரித்து பேசுவீர்கள், சிறப்பாக வரவேற்பீர்கள் அப்பா - சிலர் சிறு உதவி செய்தாலும் அதை திறம்பட பல மடங்காய் செய்வீர்கள் அப்பா. உங்கள் சிரிப்பில் எங்களை பார்க்கின்றோம், உங்கள் பார்வையில் மீண்டும் எங்களை பார்க்கின்றோம்.
உங்களை போன்ற உருவம் கொண்ட யாரை பார்த்தாலும் எங்கள் கண்ணில் கண்ணீர் வருகின்றது அப்பா. எங்களுக்கு பாசம் காட்டுவதற்கு அப்பா இல்லையே என்று நினைக்கும்போதெல்லாம் அழுகின்றோம், எங்களை விட்டு தூரம் இருக்கும்போதெல்லாம் எப்போதப்பா வருவீர்கள் என்று காத்திருந்தோம்- எங்கள் அருகில் வந்த நீங்கள் தொலை தூரம் சென்றீர்களே அப்பா.
எப்படி இருந்தாலும் நாங்கள் நீங்கள் நினைத்தபடி நன்றாக படித்து நல்ல பிள்ளைகளாக வளர்ந்து எங்கள் அம்மாவின் கண்ணீர் துடைப்போம்.